Thursday, October 29, 2009

ஆசிரியரும் மாணவரும் கலக்கிய கண்ணதாசன் விழா - 09)

அனைத்து அங்கங்களும் கைதட்டல் பெற்றன. ஐநூறு பேருக்குக் குறையாத கூட்டம், ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாய்க் கவனித்துக் கைதட்டி இரசித்து மகிழ்ந்தது.

வசந்தி ராமச்சந்திரனின் இனிமையான தமிழ்வாழ்த்தோடு கூட்டம் ஆரம்பம் ஆகியது. கண்ணதாசன் பாடலுக்கு ஆடிய மெத்தடிஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவியரின் நடனம் மனம் கவர்ந்தது.

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா ….பாட்டெல்லாம் கண்ணதாசன் பாட்டாகுமா?
கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டியில் பங்கு பெற்ற ஒன்பது பேரும் இனிமையாய்ப் பாடினார்கள். மேடையில் அவர்களின் படைப்புத்திறனையும், கண்ணதாசனனின் பாடல் வரிகளையும் கூட்டம் வெகுவாய் ரசித்து மலரும் நினைவுகளில் மூழ்கிப் பரவசமடைந்தது.

கவிதாஞ்சலியில் கோவிந்தராசு தன் அழகான கவிதை வரிகளால் அரங்கத்தைக் கலகலப்பாக்கித் தயார் நிலைக்குக் கொண்டு வந்தார். கவிஞர் தண்ணீரில் மூழ்கியதால் தமிழ் கரையேறியது என்றார். தொடர்ந்து முனைவர் இரத்தின வேங்கடேசன் மயக்கும் கவிகொண்டு கூட்டத்தை மயக்கநிலையில் தக்க வைத்தார்.

அடுத்து வந்தார் ஆசிரியர் மா. கண்ணப்பன். ஆரம்பமே அருமை. ‘கவிதாஞ்சலியில் கவிபாட, என்ன செய்தால் கவிதை வரும் என்று நிலாப்பார்த்து, கண் பார்த்து, பெண்பார்த்து, பேனும் பார்த்து விட்டேன். தண்ணி போட்டும் பார்த்து விட்டேன். கவிதை வரவில்லை’‘என்றபோது அரங்கம் அதிர்ந்தது. எது கைக்கு வந்தாலும் ‘எதுகை’ எனப்போடமாட்டார் கண்ணதாசனென்றார்.

அவர் தன் மாணவர் சுப. வீரபாண்டியனைஎன்னிடம் படித்தும் எப்படி இப்படி உயர்ந்தாய்?’ என்று கேட்டபோது கூட்டத்தில் மிகப்பெரிய கரவொலியும் சிரிப்பும். அவர் தொடர்ந்து சிக்சரும், பவுண்டரியும் அடித்துக் கொண்டிருந்தார் அவருக்கான நேரம் முடிந்தும். மற்ற அங்கங்களுக்கு நேரம் ஆகிறதே என்கிற தவிப்பில் நெறியாளர் சுபா பின்னாலிருந்து நினைவுறுத்திக் கொண்டே இருந்தார். தலைவர் ஆண்டியப்பன் சீட்டில் எழுதியனுப்பினார். பலத்த கைதட்டலோடு கவிதாஞ்சலியை முடித்தார் கண்ணப்பன்.

கண்ணதாசனைப் பற்றிய ஓர் உண்மை
தலைமையுரையில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு.ஆண்டியப்பன், கண்ணதாசனைப் பற்றிய ஓர் உண்மையைச் சொன்னார். தண்ணிபோடுவதால்தான் அவருக்குக் கவிதை வந்தது என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. அவர் கவிதை எழுதி விட்டுத்தான் தண்ணி போடுவார் என்றார்.

தவைவரின் இனிப்பான அறிவிப்பு
திரு.ஆண்டியப்பன், எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு இனி வரும் ஆண்டுகளில் சிறந்த நூலுக்கு (சிறுகதை, கவிதை, கட்டுரை எனச் சுழற்சி முறையில்) இரண்டாயிரம் வெள்ளி பரிசு, சமீபத்தில் மறைந்த கொடையாளர் ஆனந்தபவன் உரிமையாளர் மு. கு. இராமச்சந்திரா அவர்கள் பெயரால் வழங்கப்பட உள்ளது என்றார். அதற்கு திருமதி பானுமதி இராமச்சந்திரா அவர்களுக்கு நன்றி கூறிவிட்டுச் சுருக்கமாகத் தன் உரையை முடித்துக் கொண்டார் தலைவர் ஆண்டியப்பன்.

சிறப்பு விருந்தினர் சந்துருவும் சுருக்கமான தன் உரையில்
தனக்குப் பிடித்த தன்னை இன்றும் ஊக்கப்படுத்துகிற கண்ணதாசன் பாட்டு ‘அச்சம் என்பது மடமையடா..’ என்று சொல்லிவிட்டு, ஏட்டில் எழுதிக்கொண்டு வரவில்லை. என் இதயத்து உணர்வுகளைச் சொல்லுகிறேன் என்று கூறிய போது பலத்த கரவோசை.


கண்ணதாசனும் நானும்
தமிழ்நேசன் ஞாயிறுபதிப்பு ஆசிரியர் சந்திரகாந்தம் கண்ணதாசனோடு அவர் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டபோது ‘எல்லோருக்கும் ஒரு மதம் பிடிக்கும். ஆனால் எனக்குத் தாமதம் பிடிக்கும்’ என்று கண்ணதாசன் சொன்ன நயத்தைப் பாராட்டினார்.

மாணவர் சுப.வீரபாண்டியன்

சிறப்புரை ஆற்ற வந்த சுபவீயின் உரை ‘கண்ணதாசனும் தமிழும்’ என்கிற தலைப்பில் வித்தியாசமாக இருந்தது. அவர் இன்னும் வாழ்ந்திருந்தால் இன்னும் நிறையக் காவியங்கள் தமிழுக்குக் கிடைத்திருக்கும். ஈழமக்களுக்காக எழுத எண்ணியிருந்தார் கவிஞரென்றார். சுபவீயிடமிருந்து கவிஞரின் கவிதைகள் மடைதிறந்தாற்போல வந்து கொட்டியது. ஆங்காங்கே நகைச்சுவையோடும் நயத்தோடும் அமைந்த அவர் உரையைக் கூட்டம் வெகுவாய் ரசித்தது.

‘எளிமையான’ வரிகளில் கவிபாடி எல்லோரையும் கவர்ந்தவர் கண்ணதாசன். வார்த்தைகள் வந்து அருவிபோலக் கொட்டும்.
எளிமைதான் அவர் கவிதைகளின் ஆளுமை. அவர் சொன்னதையே அவரே மாற்றிக் கொள்வார் என்றும் அவரின் இயல்புகளைச் சொன்னார். ஆரம்பத்தில் நாத்திகர் பின்னாளில் ஆத்திகர். தனித்தமிழை ஆதரித்தவர் பின்னர் அதில் தனக்கு உடன்பாடில்லை என்றாலும் தமிழை அவர் ஒருபோதும் மறுத்தது இல்லை. கம்பனை, பாரதியை, கண்ணதாசனை ஒப்பிட்டுக்காட்டிய சுபவீ கண்ணதாசன் பெரியாரை அண்ணாவை காமராசரை பாராட்டியும் இருக்கிறார். அவர்களைத் தாக்கிப்பேசியும் இருக்கிறார் ஆனுலும் அவரின் தமிழுக்காக பொறுத்துக்கொண்டார்கள் என்றார். ‘அனுபமே கடவுள்’ எனும் கருத்துள்ள கவிஞரின் கவிதையை எடுத்தாண்டு பேசினார். யார் பணம் கேட்டாலும் எடுத்து கொடுப்பார். எண்ணிக் கொடுக்க மாட்டார்கண்ணதாசன் மிகச் சிறந்த மனிதர்’ என்று நிறைவு செய்தார்.

சுபவீ சுமார் ஒருமணி நேரம் சிறப்புரை ஆற்றி முடித்த போது கூட்டம் எழுந்து நின்று கரவொலி எழுப்பியது.


விழா நிறைவு
பொருளாளர் சித்ராவின் நன்றியோடும், பதிர்க்கேள்விக்கான பரிசளிப்போடும் விழா 9:50க்கு நிறைவை நாடியது.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் சுபா.அருணாசலம் தனது அழுத்தமான, தொகுப்புரையில் ஆங்காங்கே நகைச்சுவை கலந்து கூட்டத்தைத் தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாகக் கொண்டு சென்றார்.

கண்ணதாசனையே பேசிக்கொண்டு, கண்ணதாசனையே பாடிக்கொண்டு, கண்ணதாசனையே நினைத்துக்கொண்டு கூட்டம் கலைந்து போனது. அவர் புகழ் இப்புவியில் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். அவரை இவ்வுலகம் தமிழ் உள்ளமட்டும் நினைத்திருக்கும் என்பதில் ஐயமுண்டோ?

1 comment:

  1. விழாவில் பேசிய ஒவ்வொருவரும் என்ன சொன்னார் என்பதை அழகாக எழுதினீர்கள். ஒரு நல்ல நிகழ்ச்சியை மிஸ் பண்ணிவிட்டோம் என்று நினைக்க வைக்கிறது.

    ReplyDelete